Sunday, December 2, 2018

9. திருப்புகழ் 104.வாட்போக்கி (ரத்நகிரி )

9.திருப்புகழ் 104.வாட்போக்கி

வாட்போக்கி அருணகிரிநாதர் தரிசித்துப் பாடிய 104வது தலம். இது குளித்தலைக்கு அருகில் உள்ளது. சிவன் கோவில் மலைமேல் அமைந்திருக்கிறது.  ரத்நகிரி, மரகதாசலம், மாணிக்கமலை என்னும் பெயர்களும் உண்டு. மலையை சிவாயம் என்றும் சொல்வதால் இந்த ஊருக்கு சிவாயநகர்.சிவதைப்பதி என்றும் பெயர் இருக்கிறது. இந்த மலையை ஐயர்மலை என்று இன்று சொல்கிறார்கள்.


.
இது செங்குத்தான படிகளைக்கொண்ட சற்று உயரமான மலை.ஸ்வாமி ரத்னகிரீஶ்வரர், வாட்போக்கி நாதர், அம்பாள் கரும்பார்குழலி. இது அப்பர் பாடல்பெற்ற தலம்.எமபயத்தைப் போக்க வாட்போக்கியை  நாடுங்கள் என்று பாடுகிறார்.



கால பாசம் பிடித்தெழு தூதுவர்
பால கர்விருத் தர்பழை யாரெனார்
ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார்
சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே.


வந்திவ் வாறு வளைத்தெழு தூதுவர்
உந்தி யோடி நரகத் திடாமுனம்
அந்தி யின்னொளி தாங்கும்வாட் போக்கியார்
சிந்தி யாவெழு வார்வினை தீர்ப்பரே.


இரக்க முன்னறி யாதெழு தூதுவர்
பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமே
அரக்க னுக்கருள் செய்தவாட் போக்கியார்
கரப்ப துங்கரப் பாரவர் தங்கட்கே.


இங்கு அருணகிரிநாதர் பாடிய மூன்று திருப்புகழ்பாடல்கள் இருக்கின்றன.

சம்சாரத்தில் மயங்காது முருகன் திருவடி பெற


சுற்றகப டோடுபல சூதுவினை யானபல
 கற்றகள வோடுபழி காரர் கொலை காரர்சலி
 சுற்றவிழ லானபவி ஷோடுகடல் மூழ்கிவரு      துயர்மேவித்

துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு
  செத்தையென மூளுமொரு தீயில்மெழு கானவுடல்
 சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு            பொறியாலே


சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில்
 தத்துஅறி யாமலொடி யாடிவரு சூதரைவர்
சத்தபரி சானமண ரூபரச மானபொய்மை          விளையாடித்

தக்கமட வார்மனையை நாடியவ ரோடுபல
 சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல்
 தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாதபத          மருள்வாயே


தித்திமித தீதிமித தீதிமித தீமிதத
 தத்ததன தானதன தானனன தானனன
 திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு              எனதாளம்

திக்குமுகி லாடஅரி யாடஅய னாடசிவ
 னொத்துவிளை யாடபரை யாடவர ராடபல
 திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர்          களமீதே

எத்திசையு நாடியம னார்நிணமொ டாடபெல
 மிக்கநரி யாடகழு தாடகொடி யாடசமர்
 எற்றிவரு பூதகண மாடவொளி யாடவிடு          வடிவேலா


எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை
 சித்தமலை காமுககு காநமசி வாயனொடு
 ரத்நகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர்        பெருமாளே
.

பல வஞ்சனைகள் சூழவும், சூது மிக்க பல தொழில்களும் கொண்டு,  கற்ற கள்ளத் தொழிலோடு பழிக்கு இடம் தருபவர்கள், கொலைகாரர்கள் ஆகியவர்களுடன் கூடிச் சலிப்புற்று,  வீண்பெருமையோடு அலைந்து, வாழ்க்கையில் மூழ்கி, துன்பங்களை அடைந்து,

துக்கம் தரும் சம்சாரக் கடலில் மீன்போல அலைந்தும், கூழில் விழுந்த குப்பை போலக் கிடந்தும், எரியும் பெரிய நெருப்பிலிட்ட மெழுகுபோல உருகுவதும்,சுத்தம் என்பதையே அறியாத அழுக்கு பாரம் கொண்டதுமான  இந்த உடலில் பொருந்தி வேலை செய்யும் இந்த்ரியங்களால்,

சிறிதுகூட மதிக்காத ,இரக்கமில்லாமல் வலுவும் செருக்கும் கொண்டு காலன் வரும் நேரத்தில். இந்த ஆபத்து வருவதை அறியாமல் ஓடியாடி வரும்  சூதாடிகளான ஐம்புலன்கள்   என்போர் ஸப்தம். ஸ்பர்ஸம், மணம், ரூபம், ரஸம் என்னும் பொய் இன்பங்களில் திளைத்து, விளையாடி, 

தகுந்த மாதர்களையும் அவர்கள் வீடுகளையும் தேடிச்சென்று, அவர்களோடு பலவிதமான மாய  வித்தைகளை விளையாடுகின்ற தொழில், சீ சீ என்று பலராலும் வெறுப்புடன் கூறத்தக்கதாய்த் தோன்ற - இப்படி நான் வருத்தமடைந்து  நைந்துபோய் இறந்து படுதல் தகுமோ ?  நீ உன் அழிவில்லாத  திருவடிகளைத் தந்தருள்வாயாக. 

தித்திமித தீதிமித------டாடமட....டூடுடுடு  என்றிப்படி பலவகையான தாளம் திக்குகளில் ஒலிக்க, திருமால் களிப்புடன் ஆட, பிரம்மனும் ஆட,சிவனும் மகிழ, தேவி களித்து ஆட, சிறந்த முனிவர்கள் களிப்புடன் கூத்தாட, பல திக்குகளிலும் இருந்த அசுரர்கள் வாடி மயங்க, தேவர்கள் பாட, வேதம் பாடித் துதிக்க, எதிர்த்து வந்த போர்க்களத்தில்,

திசைகளையெல்லாம் தேடிச்சென்ற எம தூதர்கள் போர்க்களத்தில் கிடந்த மாமிசக் கொழுப்பில் நடக்க, பலம் மிக்க நரிகள் களித்துக் குதிக்க, பேய் மகிழ்ந்து கூத்தாட, காக்கைகள் களித்து ஆட, போரில் மோதி வருகின்ற பூத கணங்கள் களித்து ஆட,
ஒளியை வீசும்படி விடுத்த  கூர்மையான வேலனே !

பலவித வேடங்களைக்காட்டி ஏமாற்றி, ஒப்பற்ற  மான் போன்ற, தினைகாவலில் வல்லவளான வள்ளியின்  மனதை அலைவித்த காமுகனே! சிவபிரானோடு ரத்னகிரியில் வாழும் முருகனே ! என்றும் இளையவனே ! தேவர் பெருமாளே !






நற்கதி பெற

புயலுற் றியல்மைக் கடலிற் புகுகொக்
 கறமுற் சரமுய்த்               தமிழ்வோடும்

பொருதிட் டமரர்க் குறுதுக் கமும்விட்
 டொழியப் புகழ்பெற்          றிடுவோனே

செயசித் திரமுத் தமிழுற் பவ
நற்
 செபமுற் பொருளுற்          றருள்வாழ்வே

சிவதைப் பதிரத் தினவெற் பதனிற்
 றிகழ்மெய்க் குமரப்            பெருமாளே.


நலமற் றறிவற் றுணர்வற் றனனற்
 கதியெப் படிபெற்                றிடுவேனோ


புயல் உற்ற இயல் மைக் கடலில் புகு கொக்கு அ
முன் சரம் உய்த்த அமிழ்வோடும்  =  
மேகம் படியும் இயல்புடைய கருங்கடலில்  புகுந்து நின்ற  மாமரமாகிய சூரன்
அறும்படி முன்பு  வேலை விட்டு அடக்கி ஆழ்த்தும் ஆற்றலுடன்
பொருதிட்டு  அமரர்க்கு உறு துக்கமும் விட்டொழிய
புகழ்பெற்றிடுவோனே
போர் செய்து தேவர்களுக்கு வந்த துக்கம் அவர்களை விட்டு நீங்கச் செய்த
புகழை உடையவனே !
ஜெய சித்திர முத்தமிழ் உற்பவ  நல் ஜெபம் 
முன் பொருள்  உற்று அருள் வாழ்வே
வெற்றியைத் தரும் அழகிய முத்தமிழ்ப் பாக்கள் மூலம் வெளித்தோன்றும்
சிறந்த மந்திரங்களையும்  மேலான பொருளையும்  அனுபவித்து 
உலகுக்கு அருளிய  செல்வமே !
சிவதைப்பதி ரத்தின வெற்பதனில் திகழ்
மெய் குமரப் பெருமாளே !
சிவதைப்பதி (சிவாயம் ) என்னும் ரத்னகிரியில்  விளங்கும்
உண்மைப் பொருளாகிய  ( வடிவாகிய )பெருமாளே !
நலமற்று அறிவற்று நல் உணர்வற்றனன்
நற்கதி எப்படி  பெற்றிடுவேனோ 
நல்ல நலன்களை இழந்து, அறிவை இழந்து, நல்ல உணர்வையும் இழந்த நான்
நல்ல கதியை எப்படிப் பெறுவோனோ . ( உன் அருளால் பெறவேண்டும் என்றபடி).

இங்கே ஜெயசித்திர முத்தமிழ் உற்பவ.....வாழ்வே என்ற அடியில்  முருகன் திருஞானசம்பந்தராக வந்ததைச் சொல்கிறார்.
ஞான சம்பந்தர் முத்தமிழ் விரகன், நாற்கவி ராஜன், தமிழாகரன். பரமனைப் பதிகம் பாடித்துதிக்கும் பெரு நெறியைத் தோற்றுவித்தவர். தமிழ்ப்பதிகம் பாடிப் பிற மதத்தினரை வாதில் ஜெயித்தவர்.  "வள்ளல் குருராயன் வாதுவென்ற சம்பந்தன்" என்று ஒருபாடல் கூறும். இதற்கு வள்ளலார் ராமலிங்க அடிகள் அரிய உரை செய்திருக்கிறார்கள்.
இனி, அருணகிரிநாதர் தானும் சம்பந்தர் போல அமிர்தகவி பாடவேண்டுமென்று ஒரு பாடலில் வேண்டுகிறார்:

புமியதனிற் ப்ரபுவான  புகலியில் வித்தகர் போல
அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே.




முக்தி பெற பக்தியே வழி !

தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் - அறம், பொருள், இன்பம், வீடு- ஆகிய நான்கு  பொருள்களே மனித வாழ்வின் உன்னத லக்ஷ்யம் = புருஷார்த்தம் என்பது நமது மதத்தின் எல்லாப் பிரிவினரும் ஏற்றுக்கொண்ட அடிப்படைக் கோட்பாடு. இனி, மோக்ஷத்தை அடையும் வழியை பலவிதமாகச் சொல்கிறார்கள். அருணகிரிநாதர் எளிய வழியைச் சொல்கிறார். இது வாட்போக்கித் தலத்திற்கான  மூன்றாவது பாடல்.

பக்தியால்  யான் உன்னைப் பலகாலும்
        பற்றியே மாதிருப்புகழ் பாடி
முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
        முக்தியே  சேர்வதற் கருள்வாயே
உத்தமா தான சற்குணர் நேயா
        ஒப்பிலா மாமணிக் கிரிவாசா
வித்தகா ஞான சத்திநி பாதா
      வெற்றி வேலாயுதப் பெருமாளே !

பக்தியால் முக்தியை அடையலாம் என்னும் நேர் வழியைக் காட்டுகிறார், இதை  கந்தர் அலங்காரத்திலும் சொன்னார்: 

புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய்
முத்தியை வாங்க அறிகின்றி லேன்முது சூர்நடுங்கச்
சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக்

குத்திய காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே.

இதற்கும்  ஒருபடி மேலே போய், பக்தியே முக்தி என்னும்  பெரு நிலையில் நிற்கிறார் அருணகிரிநாதர்.

ஆன பயபக்தி வழிபாடு பெறு முக்தியது
வாக நிகழ் பத்தஜன வாரக் காரனும்    திருவேளைக்காரனே

என்று திருவேளைக்காரன் வகுப்பில் கூறுகிறார்.

இப்படி அரிய பொருள்களை விளக்கும் மூன்று பாடல்களை  ரத்னகிரி என்னும் வாட்போக்கித் தலத்தில் அருளியிருக்கிறார் அருணகிரிநாதர்,

 மயில் கொன்றை    www.pasumaikudil.com/



No comments:

Post a Comment