Friday, December 14, 2018

17.திருப்புகழ் 121.கீரனூர் 122.ஆய்க்குடி


17.திருப்புகழ் 121. கீரனூர்

கொண்டலிறங்கி கீரனூர் மலை! இங்கிருந்து பழநி தெரியும்!
  நன்றி : http://www.seithipunal.com

அருணகிரிநாதர்  ஊதிமலையிலிருந்து கீரனூருக்கு வருகிறார். இது இவர் தரிசித்த 121வது தலம். இது தாராபுரம்-பழனி வழியில் இருக்கிறது. இங்கு ஒரு பாடல் இருக்கிறது.

பார மேருப ருப்பத மத்தென
  நேரி தாகஎ டுத்துட னட்டுமை
  பாக ராரப டப்பணி சுற்றிடு         கயிறாகப்

பாதி வாலிபி டித்திட மற்றொரு
  பாதி தேவர்பி டித்திட லக்ஷுமி
  பாரி சாதமு தற்பல சித்திகள்        வருமாறு

கீர வாரிதி யைக்கடை வித்ததி
  காரி யாயமு தத்தைய ளித்தக்ரு
  பாளு வாகிய பச்சுரு வச்சுதன்         மருகோனே


கேடி லாவள கைப்பதி யிற்பல
  மாட கூடம லர்ப்பொழில் சுற்றிய
  கீர னுருறை சத்தித ரித்தருள்           பெருமாளே.


 தோதக வித்தைகள் கற்பவ              ருறவாமோ

(ஈரமோடு சிரித்து )

கனத்த மேரு மலையை  மத்தாகத் தேர்ந்தெடுத்து, உடனே அதைப் பாற்கடலில் நாட்டி, உமையைப் பாகமாக உடைய சிவபெருமானது கழுத்தில் மாலையாக விளங்குவதும், படங்களைக்கொண்டதுமான (வாசுகியாகிய ) பாம்பை அந்த மத்தில்  கயிராகச் சுற்றி,
ஒரு பாதியை வாலி பிடிக்க, மற்றொரு பாதியை தேவர்கள் பிடிக்க, லக்ஷ்மி, பாரிஜாதம் முதலிய சித்திகளும், அரிய பொருட்களும் ( அப்பாற்கடலிலிருந்து) வெளிவர,
பாற்கடலைக் கடையவைத்த தலைவனாய், அமுதத்தைத் தேவர்களுக்குக் கொடுத்தருளிய க்ருபாமூர்த்தியாகிய  பச்சை நிறம் கொண்ட திருமாலின் மருகனே !
கேடில்லாத குபேரனுடய அளகாபுரியைப்போல பல மாடக்கூடங்களும் மலர்ச்சோலைகளும்  நிறைந்த கீரனூரில் அமர்ந்து வேல் ஏந்தி அனைவருக்கும் திருவருள் புரியும் பெருமாளே !
வஞ்சனை வித்தைகள்  கற்றுள்ள விலைமகளிர் உறவு  நல்லதாகுமா? (ஆகாது )

பாற்கடலைக் கடைந்தது

அருணகிரியாரின் அருமை வாக்கிலிருந்து வரும் அமுதப் பாடல். பாற்கடலைக் கடைந்த பாகவத நிகழ்ச்சியை அருமையாக விவரிக்கிறார். திருமால்  பாற்கடலிலிருந்து வந்த அமுதத்தைத் தேவர்களுக்கு அளித்தார். ஆனால், பாற்கடலிலிருந்து முதலில் வந்தது ஆலகால விஷம் ! இதைச் சிவபெருமான் அருந்தவில்லையெனில், அமுதம் தேவர்களுக்குக் கிடைத்திருக்காது! சிவபெருமான் அந்த விஷத்தைப் பருகும்போது அதைக் கண்டத்திலேயே தடுத்து நிறுத்தியது உமாதேவியார் ! இந்த விஷயத்தை நேரடியாகச் சொல்லாமல், "உமை பாகர் " என்று சுருங்கச்சொல்லி அசத்துகிறார் ! மேலும் சிவபிரான் விஷப்பாம்பையே மாலையாக அணிந்துள்ளார். வேறு விஷம் அவரை என்ன செய்துவிடும் என்ற குறிப்பும் இருக்கிறது!

பொது மகளிர்

இப்பாடலில் முதல் நான்கு  அடிகள்  (இங்கு தரவில்லை)பொது மகளிர் பற்றியது. இப்படிப் பல பாடல்களில் இருக்கும். இதை  அருணகிரி நாதரின் வாழ்க்கையோடு தொடர்பு படுத்திப் பேசுகின்றனர். இது தவறாகும். தமிழ் நாட்டில் பரத்தையர் வழக்கம் பொதுவாக இருந்தது. இதைச் சங்க இலக்கியத்தில் காணலாம். இதைக் கண்டித்து எழுதியவர் திருவள்ளுவர். பிறனில் விழையாமை, வரைவின் மகளிர் என்று இரு அதிகாரங்களை வகுத்து கண்டித்திருக்கிறார். நமது சமய இலக்கிய மரபில் பெரியோர்கள் உலகில் உள்ள எல்லாக் குற்றங்களையும் தம்மீதே ஏற்றிச் சொல்வார்கள். தம்மையே நாயேன், பேயேன் என்றெல்லாம் சொல்லிகொள்வார்கள். இதை வைத்து அவர்கள் கெட்டவர்கள் என்று நாம் எண்ணக்கூடாது. வள்ளுவரைப் பின்பற்றி அருணகிரிநாதரும் இவ்வழக்கத்தைக் கண்டிக்கிறார்.
கீரனூர் மலை : மற்றொரு தோற்றம். குன்றெல்லாம் குமரன் தானே!
 நன்றி : http://www.seithipunal.com

122.ஆய்க்குடி

கீரனூரிலிருந்து அருணகிரிநாதர்  ஆய்க்குடிக்கு வருகிறார். இது 122வது தலம்.
ஆய்க்குடி தென்காசிக்கு அருகில் உள்ளது என்று தணிகைமணி அவர்கள் எழுதியிருக்கிறார், ஆனால் இது சரியெனத் தோன்றவில்லை. இதுவரை அருணகிரியார் கொங்கு நாட்டுத் தலங்களைப் பார்த்து வருகிறார். அடுத்து தரிசிப்பது  பழநி- அதுவும் கொங்கு நாட்டில்  உள்ளது. அதனால் இங்கு குறிப்பிடும் ஆய்க்குடி  தென்காசி  ஆய்க்குடியாக இருக்க முடியாது. இனி, 
பழநிக்கு அருகிலும்  ( 4 கிமீ ) ஒரு ஆயக்குடி இருக்கிறது.  இது ஆவியர் என்ற ஒரு பிரிவினர் ஆண்ட பகுதி ( மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் பேகன் இக்குடியைச் சேந்தவன் ) அதனாலேயே பழநி அடிவாரத்திலிருக்கும் ஊர் "ஆவினன் குடி " எனப்படுகிறது.  அருணகிரியார் அடுத்துப் பாடிய தலம் பழநி என்பதால் இந்த ஆயக்குடியையே நாம் இங்கு குறிப்பிட்ட தலமாக 
எடுத்துக்கொள்ள வேணும்.

பழநி மலைத்தொடரின் ஒரு காட்சி- விக்கிபீடியா

வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு
  மாப்புடைத் தாளரசர்                    பெருவாழ்வும்

மாத்திரைப் போதிலிடு காட்டினிற் போமெனஇல்
  வாழ்க்கைவிட் டேறுமடி           யவர்போலக்

கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினை
  கோத்தமெய்க் கோலமுடன்          வெகுரூபக்

கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவரு
  கூத்தினிப் பூரையிட                   அமையாதோ


தாட்படக் கோபவிஷ பாப்பினிற் பாலன்மிசை
  சாய்த்தொடுப் பாரவுநிள்                   கழல்தாவிச்

சாற்றுமக் கோரவுரு கூற்றுதைத் தார்மவுலி
  தாழ்க்கவஜ் ராயுதனு                          மிமையோரும்

ஆட்படச் சாமபர மேட்டியைக் காவலிடு
  மாய்க்குடிக் காவலவு                             ததிமீதே

ஆர்க்குமத் தானவரை வேற் கரத் தால்வரையை
  ஆர்ப்பெழச் சாடவல                         பெருமாளே.


வாள்வீச்சினால் சேனைகளை வெருட்டி ஓட்டி அதனால் இறுமாப்படைந்த  முயற்சியுடைய  அரசர்களின் பெரிய வாழ்வும்,
ஒரு நொடிப்பொழுதில் சுடுகாட்டில் அழிந்து போகும் என்பதை நினைத்து, இல்லற வாழ்க்கையைத் துறந்து கரையேறும் அடியார்களைப்போல,
ஒரு உயர்ந்த குறிக்கோளுடன் வாழவும், உனது பாத மலரைத் தரிசித்து இளைப்பாறவும்,
வினைவசத்தால் அலையும் இத்தேகமாகிய உருவத்திற்கு பலவிதமான அலங்காரங்களைச் செய்து, துன்பங்களில்  சிக்கித்தவிக்கும்  இந்த வாழ்க்கை என்னும் கூத்து இனி முடிவே பெறாதோ ?
கால் பட்டாலே  கோபித்துச் சீறும்  விஷப்பாம்பு போல, பாலன் மார்க்கண்டேயனைக் குறிவைத்து எமன் தொடரவும்,
தமது நீண்ட திருவடியை நீட்டி,  பாலகனை விடேன் என்று பேசிய அந்தக் கோர உருவுடைய எமனை உதைத்த சிவபெருமான்
உன்னிடம் உபதேசம் பெறுவதற்காக  தமது திருமுடியைத் தாழ்த்தி வணங்க,
வஜ்ரப்படையுடைய இந்த்ரனும் தேவர்களும் உனக்கு ஆட்பட்டு நிற்கவும்,
பொன்னிறமான பிரம்மனைச் சிறையிலிட்ட ஆய்க்குடியின்  அரசனே !
இந்த உலக வாழ்க்கை என்னும் கூத்து முடியாதோ?

யாக்கை நிலையாமை

இங்கு யாக்கை நிலையாமையை உணர்ந்து தெய்வ நினைவைப் பற்றவேண்டும் என்று உபதேசிக்கிறார்.
"மாத்திரைப் போதில்..போம்" = இந்த உடல்  அழியக்கூடியது.
"அல்லின் நேரும் மின் அது தானும் அல்லதாகிய உடல் மாயை" என்பார். இரவில் தோன்றி மறையும் மின்னல் போல இந்த உடலும் மறைந்துவிடும்.
வினை கோத்த மெய்  = இந்த உடல்  நம் முன்வினையால் அதற்கேற்ப வருவது. "விதி காணும் உடம்பு " என்பார்  அநுபூதியில். 
" வினைப்போகமே ஒரு தேகம் கண்டாய்
வினைதானொழிந்தால்  தினைப்போதளவும்  நில்லாது கண்டாய் "
என்பார் பட்டினத்தார்.

எமனுக்குக் கோபம் ?

எமனுக்குக் கோபம் வருமா?  குறித்த காலத்தில் வந்து உயிரைப் பறிப்பது எமனுடைய தொழில். இதில் அவனுடைய சொந்த விருப்பு-வெறுப்புக்கு இடமில்லை. எமனுக்குத் தர்மராஜா என்றும் பெயர் ! ஆனால் எமன்  கோபத்துடன் கண்கள் சிவக்க வருவதாகப் பாடுவது மரபு. இது உயிர் பிரியும்  நேரத்தில் விளையும் துன்பத்தைக் குறித்துச் சொல்வது.
"முதலவினை முடிவில் இரு பிறை எயிறு கயிறு கொடு
முது வடவை  விழி சுழல வரு கால தூதர் " என சீர்பாத வகுப்பில் சொல்வார்.
"கரிய பெரிய எருமை கடவு  கடிய கொடிய திரிசூலன்
கறுவி யிருகு கயிரொ டுயிர்கள் கழிய  முடுகி எழுகாலம் " 
என ஒரு பாடலில் சொல்வார்.இப்படிப் பல பாடல்களில் பாடியிருக்கிறார். வாழ்க்கை நிலையாமையை உணர்ந்து தெய்வத்தைப் பற்றவேண்டும் என்பதே  நோக்கம். இந்த உலகத்துடன் நமது தொடர்பு இந்த உடலைப் பற்றி அமைந்ததே.. உடல் நிலையில்லாதது என்பதால் இந்த உலகத்துடனான தொடர்பும் நிலையற்றதே. நம் உயிருக்குள்ள தொடர்பு இறைவனுடனானது, இதற்கு முடிவே இல்லை! இதைத்தான் அருணகிரி நாதர் வலியுறுத்துகிறார்.
"ஆவிக்கு மோசம் வருமாறறிந்துன் அருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின்றிலேன் வினை தீர்த்தருளாய் " என்று அலங்காரத்தில் சொல்கிறார். 

பிறவி என்னும் கடல்

"பாரி வரு கூத்து " = வளர்ந்து வரும் ஆட்டம்.இந்த உலக வாழ்க்கை ஒரு கூத்து போன்றது.இது பல பிறவிகளில் தொடர்ந்து வருவது. வினை தீராத வரை இந்தகூத்தும் முடிவுபெறாது.
"எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர்ப்பிறவி  அவதாரம் ". நாம் எடுத்த பிறவிகளுக்குக் கணக்கே இல்லை!

 இதற்குத் தீர்வு இறைவன் கழலைப் பற்றுவதே. இதைத்தான் பலவிதங்களில்  சொல்கிறார் அருணகிரிநாதர்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீத்தல் அரிது.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவன் அடி சேராதார்.

-திருக்குறள் : கடவுள் வாழ்த்து.
மெய்யுணர்தல் என்னும் அதிகாரமும் பார்க்கவும்.



Thursday, December 13, 2018

16,திருப்புகழ் 119. சிங்கை 120.ஊதிமலை


16.திருப்புகழ் 119. சிங்கை (காங்கேயம்)


Anamalai, Coimbatore


இத்தலம்  ஈரோடு-திருப்பூர் ரயில் பாதையில் ஊத்துக்குழிக்கு அருகிலுள்ளது. அருணகிரிநாதர் தரிசித்த 119வது தலம். இதற்கான இரண்டு பாடல்கள் இருக்கின்றன. இரண்டிலும் வினைகள் அறவேண்டும் என வேண்டுகிறார்.

கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி
     கந்திகமழ் கின்ற ...... கழலோனே

கன்றிடுபி ணங்கள் தின்றிடுக ணங்கள்
     கண்டுபொரு கின்ற ...... கதிர்வேலா

செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கை
     திண்குயம ணைந்த ...... திருமார்பா

செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்த
     சிங்கையில மர்ந்த ...... பெருமாளே.


 யின்று நன்றில்வினை கொன்று
     நன்றுமயில் துன்றி ...... வரவேணும்


(சஞ்சரி யுகந்து)

தாமரை,கொன்றை, தும்பை, மகிழம் ஆகிய மலர்கள்  நிறைந்து  மணம் கமழும் கழல்களை உடையவனே !
அழுகிய பிணங்களைத் தின்னும் பேய், நாய், நரி, காக்கை, பருந்து முதலியவற்றின் கூட்டம் காணும்படி போர்க்களத்தில்  வீசும் ஒளியுடைய வேலை உடையவனே !
இனிய சொல்லுடைய எங்கள் குறமகள் வள்ளியை அணைந்த மார்பனே !
செண்பக மலர்கள் விளங்கும் இனிய சோலைகள் மிகுந்த சிறப்புமிக்க சிங்கை நகரில் அமர்ந்து அருளும் பெருமாளே !
என்னுடைய தீய வினைகள் இன்றே அழியுமாறு  நன்மை தரும் மயில் மீதில் வரவேணும்.

தொங்குசடை மீது திங்களணி நாதர்
   மங்கைரண காளி         தலைசாயத்

தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி
  என்றுநட மாடு                 மவர்பாலா

துங்கமுள வேடர் தங்கள்குல மாதை
  மங்களம தாக             அணைவோனே

கந்தமுரு கேச மிண்டசுரர் மாள
  அந்தமுனை வேல்கொ            டெறிவோனே

கம்பர்கயி லாசர் மைந்தவடி வேல
  சிங்கைநகர் மேவு                பெருமாளே.


சந்திதொறு நாண மின்றியகம் வாடி
  உந்திபொரு ளாக             அலைவேனோ

சங்கைபெற நாளு மங்கமுள மாதர்
  தங்கள்வச மாகி            அலையாமற்

சுந்தரம தாக எந்தன்வினை யேக
  சிந்தைகளி கூர                       அருள்வாயே


தொங்கும் சடையின்மேல் சந்திரனைச் சூடிய பெருமான், மங்கையும் போருக்கு எழுந்தவளுமாகிய காளி  நாணமடைந்து தலைகுனியுமாறு நடனம் ஆடிய  சிவபெருமானின்  குமாரனே !
பெருமை  பொருந்திய  வேடர்களின் குலத்தில் வந்த வள்ளியை அணைந்தவனே!
கந்தனே ! முருகேசனே ! போரிட நெருங்கி வந்த அசுரர்கள் மடிய  கூரியவேலை எறிந்தவனே !
காஞ்சி ஏகாம்பரநாதர், கைலாசபதி, ஆகிய சிவனது  மைந்தனே ! கூரிய வேலாயுதத்தை உடையவனே ! சிங்கைப் பதியில் அமர்ந்த பெருமாளே !
காலையும் மாலையு,ம் வெட்கமில்லாமல் உள்ளம் சோர்வடைய, வயிறே காரியமாக அலைச்சல் படுவேனோ !
தினமும் மாதர்களின் வசப்பட்டுத் திரியாமல், அழகுபெற என்னுடைய வினைகள் தொலைந்து  ஒழிய, மனம் மகிழ்ச்சி பெற  அருள்புரிவாயாக.

இருவினையும் அகலவேண்டும்

முதல் பாடலில் கெட்ட வினைகள்  ( நன்று இல் வினை ) அழியவேண்டும் என்றார். இரண்டாவது பாடலில்   பொதுவாக  "எந்தன் வினையேக " என்கிறார். நல்வினை, தீவினை ஆகிய இரண்டுமே பிறவிக்குக் காரணமாகின்றன. ஆகவே இருவகை வினைகளும் அழியவேண்டும். இதற்கு முருகன் அருள் வேண்டும். "வினை யோட விடுங்கதிர் வேல் " என்பார். "வினைப்பகை யறுத்து நினைத்தது முடித்து மனத்துயர் கெடுத்தெனை வளர்த்தருள் க்ருபைக் கடலே " என்று வேண்டுவார். இந்த வினை நீக்க வேண்டுகோள் ஜீவர்களுக்கு முக்கியமானது. திருஞான சம்பந்தரும் பல பாடல்களில் வினை நீக்கம் பற்றியே பாடியிருக்கிறார்.


Palamalai near Coimbatore

120. ஊதிமலை
அருணகிரிநாதர் தரிசித்த 120 வது தலம் ஊதிமலை. இது தாராபுரம்-காங்கேயம்  வழியில் இருக்கிறது. இதற்கான இரு பாடல்கள் இருக்கின்றன.

வணங்க அருள் வேண்டல்

ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
  ஆவுடைய மாது தந்த                                  குமரேசா

ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
  ஆளுமுனை யேவ ணங்க                     அருள்வாயே

பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
  பூரணசி வாக மங்க                       ளறியாதே

பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து
  போகமுற வேவி ரும்பு                    மடியேனை

நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
  நீதிநெறி யேவி ளங்க                       வுபதேச


நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
  நீலமயி லேறி வந்த                          வடிவேலா


ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
  ஊழியுணர் வார்கள் தங்கள்                    வினைதீர

ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
  ஊதிமலை மீது கந்த                                 பெருமாளே.


எளிய பாடல்.  கடவுளை  வணங்கவும் அவன் அருள் வேண்டும். "அவனருளாலே அவன் தாள் வணங்கி " என்பார் மாணிக்கவாசகர். " ஏடுடைய மலரால் முனை நாள் பணிந்தேத்த அருள்செய்த " என்று முதல் பதிகத்தின் முதல் பாடலிலேயே  பாடுகிறார் சம்பந்தர். அதனால் இங்கே முருகனை வணங்க அவன் அருளையே வேண்டுகிறார்.
பக்தி என்று சொன்னாலும் நமது வழிபாடு,  சாதனை முறைகள் மரபு வழியில் பெரியோர் உபதேசித்த படி இருக்கவேண்டும். நமது வழி வேத மரபில் வந்தது. அதனால் "ஓதுமறை ஆகமம் சொல் யோகமதுவே புரிந்து " என்று சொல்கிறார்.
இப்படிப் பல பாடல்களில் அருளை வேண்டுகிறார்.

இன்சொல் விசாகா க்ருபாகரா !
 நாளும் உன் புகழே பாடி
நான் இனி அன்புடன் ஆசார பூஜை செய்து
உய்ந்திட வீணாள் படாது அருள் புரிவாயே !

ஆவினன்குடி மீதிலங்கிய பெருமாளே !
கங்கையின் நீர் சொரிந்து
இரு பாத பங்கயமே வணங்கி
பூஜையும் சிலவே புரிந்திட  அருள்வாயே !

சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே !
விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே !

வெகுமலரது கொடு வேண்டியாகிலும்
ஒருமலர் இலை கொடு  மோர்ந்து யானுனை
விதமுறு பரிவொடு வீழ்ந்து தாள் தொழ அருள்வாயே.
(கூந்தலூர் பாடல் )

ஒரு மலர், இலை என்பது கீதையில் வரும்
"பத்ரம் புஷ்பம் ஃபலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதம் அஶ்னாமி "
என்ற சுலோகத்தை நினைவூட்டுகிறது.  [ பக்தியுடன் அர்ப்பணிக்கப்படும் இலை, பூ, பழம், நீர் ஆகியவற்றை நான் அருந்துகிறேன் ]
"புண்ணீயம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும் " என்பார் திருமூலர்.
இவ்வாறு நாம் செய்யும் வழிபாடு மரபுவழியில் வந்ததாக இருக்கவேண்டும்.
இப்படி மறை ஆகம வழியில் பக்தியோகம் செய்பவர்களின் வினை தீரும் 
என்கிறார் !
அடுத்த பாடலிலும் அருளையே வேண்டுகிறார்.

நாத நிலைக்குட் கருத்து கந்தருள்
  போதக மற்றெச் சகத்தை யுந்தரு
  நான்முக னுக்குக் கிளத்து தந்தையின்          மருகோனே

நாடு மகத்தெற் கிடுக்கண் வந்தது
  தீரிடு தற்குப் பதத்தை யுந்தரு
  நாயகர் புத்ரக் குருக்க ளென்றருள்                      வடிவேலா

தோதிமி தித்தித் திமித்த டிங்குகு
  டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி
 தோதிமி தித்தித் தனத்த தந்தவெ                          னிசையோடே


சூழ நடித்துச் சடத்தில் நின்றுயி
  ரான துறத்தற் கிரக்க முஞ்சுப
  சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள்                 புரிவோனே

ஓத வெழுத்துக் கடக்க முஞ்சிவ
  காரண பத்தர்க் கிரக்க முந்தகு
  ஓமெ னெழுத்துக் குயிர்ப்பு மென்சுட                  ரொளியோனே


ஓதி யிணர்த்திக் குகைக்கி டுங்கன
  காபர ணத்திற் பொருட் பயன்றரு
  ஊதி கிரிக்குட் கருத்து கந்தருள்                             பெருமாளே.


கோழை மனத்தைக் கெடுத்து வன்புல
  ஞான குணத்தைக் கொடுத்து நின்செயல்
  கூறு மிடத்துக் கிதத்து நின்றருள்                                 புரிவாயே


(கோதி முடித்து )

நாத நிலையில் (சிவ தத்துவத்தில் ) மனது நிலைக்கும்படி மகிழ்ந்து அருள்புரியும் ஞான குருவே! எல்லா உலகங்களையும் படைக்கும் பிரம்மனுக்குத் தந்தை என்று சொல்லப்பட்ட திருமாலின் மருகனே !
உன்னை நாடும் அடியேனுக்கு வந்த துன்பம் தீரும்படி திருவடியைத் தந்த கூரிய வேலனே ! நாதராம் சிவபிரான் "தகப்பன் சாமியே " என்று அன்புடன் அழைத்த வடிவேலனே !
தோதிமி தித்தி...என  பூத கணங்கள் நடனம் செய்து, நான் உயிரை விடும்போது என்மீது இரக்கம் கொண்டு,என்னை சுப மங்கள வாழ்த்து நிலையில் சேர்ப்பிக்கத்  திருவுள்ளம் கூடி, வந்து எனக்கு அருள்புரிந்தவனே!
ஓதப்படும் மந்திரங்களுக்கு உட்பொருள் என்றும், சிவ பக்தரிகளிடம் இரக்கமுள்ளவனென்றும், உயர்ந்த ப்ரணவ எழுத்துக்கு உயிர் நாடி என்றும் 
சொல்லநின்ற  பேரொளியானவனே !
ஒதியமரம் பூத்துக் குகையில் உதிர்க்கின்ற பொன் ஆபரணம்போல  அருமையான மோக்ஷ பலனைத்தரும்  பெருமாளே ! ஊதிமலையில்  மனம் உகந்து அமர்ந்தருளும் பெருமாளே !
திடம் இல்லாத மனதை ஒழித்து,, திடமுள்ள கூரிய மதியும் ஞானமும் கொண்ட குணத்தைப் பெற்று, உனது திருவிளையாடல்களைப் பேசும் இடத்தில்  இன்பமுடன் நான் நிற்கும்படி அருள் புரிவாயாக.

இது அருமையான உருக்கமான பாடல். பல அரிய கருத்துக்களைச் சொல்கிறார். பக்தியோக வழியில் பொதுவாக ஒன்பது படிகளைச் சொல்வார்கள். அதில் முதலில் வருவது  "ஶ்ரவணம் ". பகவானது பெயரையும் புகழையும் அருட்செயல்களையும் காதாரக் கேட்டு கருத்தில் வாங்கி இருத்துவது,  இது பக்தர்களுக்கு மிக மகிழ்ச்சி தரும் செயல். இப்படிப் பட்ட இடத்தில் தான் நிற்கவேண்டும் என்கிறார் அருணகிரி நாதர்.
இனிமை தரும் உன தடியவர் உடனுற
மருவ அருள்தரு கிருபையின்  மலிகுவ   தொருநாளே

என  திருமயிலைப் பாடலிலும் வேண்டுவார். 



A View of the Western Ghats, Gopan Madathil [Attribution]

பக்தர்களின் செயல்

இந்த நிலையை பாகவதம் வெகுவாகப் புகழ்கிறது.


तव कथामृतं तप्तजीवनं
     कविभिरीडितं कल्मषापहम् ।
श्रवणमङ्गलं श्रीमदाततं
     भुवि गृणन्ति ते भूरिदा जनाः 

தவ கதாம்ருதம் தப்த ஜீவனம்
கவி பிரீடிதம் கல்மஷாபஹம்
ஶ்ரவண மங்களம் ஸ்ரீமதாததம்
புவி க்ருணந்தி தே பூரிதாஜனா :


ஹே க்ருஷ்ணா ! தங்களுடைய  கதையாகிற அமிர்தம்  தாபத்தை அடைந்தவர்களுக்கு உயிர் அளிப்பது.  (வ்யாஸர், ஶுகர் போன்ற ) ஞானிகளால் கொண்டாடப்பட்டது. காம கர்மங்களைப் போக்கக்கூடியது. கேட்ட மாத்திரத்தில் மங்களங்களைக் கொடுக்கக்கூடியது. ஸகல ஐஶ்வர்யத்தையும் அளிக்கக்கூடியது. இக்கதையாகிற அமிர்தத்தை யார் சொல்கிறார்களோ அல்லது அனுபவிக்கிறார்களோ அவர்களே மஹாபாக்யசாலிகள். (புண்யம் செய்தவர்கள்.)
இதை கோபிகைகள் சொல்கிறார்கள்.
பகவான் விஷயம் சொல்பவர்கள், கேட்பவர்கள் ஆகிய இருதரப்பினருக்கும் மங்களம் தரக்கூடியது. அதனால் பக்தர்கள் கூடும் இடத்தில் பகவானைப்பற்றிய பேச்சுதான் இருக்கும். கீதையிலும் பகவான் இதைச் சொல்கிறார் :

सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः।
नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते।।9.14।।


ஸததம் கீர்த்தயன் தோமாம்   யதன்தஶ்ச த்ருடவ்ரதா :
நமஸ்யன் தஶ்ச  மாம் பக்த்யா  நித்ய யுக்தா உபாஸதே .      9.14

உறுதியான நிச்சயம் கொண்ட பக்தர்கள்  இடைவிடாது என்னுடைய நாமங்களையும் குணங்களையும் கீர்த்தனம் செய்துகொண்டும், என்னை அடையும் முயற்சியில் ஈடுபட்டும், என்னைத் திரும்பத் திரும்ப வணங்கிக்கொண்டும், எப்பொழுதும் என்னுடைய தியானத்திலேயே நிலைத்திருந்தும்  வேறு ஒன்றிலும் நாட்டமில்லத அன்புடன் என்னை வழிபடுகிறார்கள்.

मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परम्।
कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च।।10.9।।


மத் சித்தா மத் கதப்ராணா  போதயன்த : பரஸ்பரம்
கதயன்தஶ்ச  மாம் நித்யம் துஷ்யன் திச ரமன் தி ச        10.9

என்னிடமே மனதைச் செலுத்தியவர்களும், என்னிடமே உயிரை அர்ப்பணித்தவர்களுமான பக்தர்கள் , தங்களுக்குள்ளே என்னுடைய ப்ரபாவத்தை விளக்கிக்கொண்டும்,  என் குணங்களையும் ப்ரபாவத்தையும் பேசிக்கொண்டும் எப்பொழுதும் மகிழ்கிறார்கள். என்னிடமே இன்புறுகிறார்கள்.

இப்படிப்பட்ட இடத்தில் தான் நிற்கவேண்டும் என்கிறார்  அருணகிரியார்.


நாட்டு ரோஜா, http://thooddam.blogspot.com/



Tuesday, December 11, 2018

15.திருப்புகழ் 116.எழுகரைநாடு.117.தென்சேரிகிரி 118.பட்டாலி-சிவமலை

15.திருப்புகழ் 116.எழுகரைநாடு

இது இடம் விளங்காத ஸ்தலம் என்றாலும் வட கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தது என்று தணிகைமணி யவர்கள் எழுதியிருக்கிறார். சிலர்  இது இலங்கையில் இருக்கிறதென்றும் குடகில் இருக்கிறதென்றும் சொல்கிறார்கள். அருணகிரிநாதர் தரிசித்த 116வது ஸ்தலமான இதில் பாடிய மிக உருக்கமான பாடல் ஒன்று இருக்கிறது.

பரம்பொருளைப்பெற

விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்
  விழிபுனல் தேக்கிட       அன்புமேன்மேல்

மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற
  விழைவுகு ராப்புனை        யுங்குமார


முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை
  முலைநுகர் பார்த்திப        என்றுபாடி

மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட
  முழுதும லாப்பொருள்       தந்திடாயோ


பரகதி காட்டிய விரகசி லோச்சய
  பரமப ராக்ரம        சம்பராரி

படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய
  பகவதி பார்ப்பதி        தந்தவாழ்வே

இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட
  எழுகிரி யார்ப்பெழ        வென்றவேலா

இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய
  எழுகரை நாட்டவர்         தம்பிரானே.


விரகற நோக்கியும் உருகியும் வாழ்த்தியும் =  தந்திரம் இல்லாத நேரான புத்தியுடன் உன்னைக் கருதியும், உன்னை நினைத்து மனம் உருகியும், உன்னை வாழ்த்தியும்.
அன்பு மேன்மேல் மிகவும்  = உன்னிடம் பக்தி  மேன்மேலும் வளரவும்,
ராப்பகல் பிறிது பராக்கற  == இரவும் பகலும்  பிறவிஷயங்களைச் சிறிதும்  நினைக்காமல்,
விழைவு குராப்புனையும் குமார ==  குராமலரை விரும்பி அணியும் குமரனே !
முருக, ஷடாக்ஷர  சரவணபவனே!
கார்த்திகை முலை நுகர் பார்த்திப  =  கார்த்திகை மாதர்களின் முலைப்பால் அருந்திய அரசனே !
என்று  பாடி
மொழி குழறாத் தொழுது = மொழி குழறும்படி  உன்னைத் தொழுது,
அழுதழுது ஆட்பட  =  மனம் உருகி அழுது உனக்காட்பட்டு
முழுதும் அலாப்பொருள் = இந்த  உலகப் பொருட்கள் யாவற்றையும் கடந்த அந்த மெய்ப்பொருளை  (ஞானத்தை )
தந்திடாயோ 
பரகதி காட்டிய விரக = (சம்பந்தராக வந்து தேவாரம் மூலமாக ) உலகத்தவருக்கு  மோக்ஷவீட்டைக் காட்டிய  சாமர்த்யசாலியே
சிலோச்சய = மலைகளுக்கு அரசே
பரம பராக்ரம
சம்பராரி பட விழியாற் பொரு  = மன்மதன் சாம்பலாய் அழிய,  நெற்றிக்கண் கொண்டு அவனை எரித்த
பசுபதி போற்றிய பகவதி  பார்ப்பதி தந்த வாழ்வே = பசுபதியாகிய சிவபிரான் போற்றிய   செல்வமே !பகவதி  பார்வதி  தந்த பெருவாழ்வே !
இரைகடல் தீப்பட = அலை ஓசையுடன் கூடிய கடல் தீப்பற்றி எரியவும்.
நிசிசரர் கூப்பிட  = அசுரர்கள் அலறிக் கூப்பாடு போடவும்,
எழுகிரி ஆர்ப்பெழ =  ஏழு மலைகளும்  பெருஞ்சப்தத்துடன்  நொறுங்கியழியவும்,
வென்ற வேலா-
இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய = தேவர்கள் அனைவரையும் மீண்டும் அவர்கள் நாட்டில் குடியேற்றிய
எழுகரை நாட்டவர் தம்பிரானே !
மெய்ப்பொருளை  அருள்வாயே !
இந்தப்பாடலில் அரிய பெரிய விஷயங்களை அனாயாசமாகச் சொல்கிறார்.

விரகற நோக்கியும் என்பது முக்கியமான உபதேசம். பகவானை வஞ்சமில்லாமல், வக்ரபுத்தி, தந்திர எண்ணம் எதுமில்லாமல் அணுகவேண்டும். "விமல ஹ்ருதய " என ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் சொல்வார்.  "அனஸூயவே " என்று கீதையில் வரும்.
பிறிது பராக்கர = பக்தி வழியைப் பற்றுவோர் பிற விஷயங்கள் எதிலும் நாட்டம் கொள்ளலாகாது. இந்த நிலையை " அனன்ய சிந்தை", "அனன்ய சேதா" என்று பகவான் கீதையில் சொல்வார்.
அழுதழுது - அழுதால் உன்னைப் பெறலாமே என்பார் மாணிக்கவாசகர்.
"மொழி குழற  அழுது தொழுது உருகுமவர் விழி அருவி முழுகுவதும் " என்று சீர்பாத வகுப்பில் சொல்வார்.
முழுதும் அலாப் பொருள் = மெய்ப்பொருளை- கடவுளை 'இதுதான் அது' என்று சுட்டிக்காட்ட முடியாது. ப்ரஹ்மத்தை இதுதான் என்று சொல்லமுடியாது. தெரியும் என்று சொல்பவன் அறியமாட்டான், அறிந்தவன்  சொல்லித்திரிய மாட்டான் ,  உலகத்தவர் சொல்லும் எதுவும் அதுவல்ல  என்பது உபனிஷதம். எல்லாவற்றையும் கடந்தது கடவுள்.
"உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென நின்றதுவே " என்பார் கந்தர் அநுபூதியில்.
பரகதி காட்டிய  விரகன் - இதை அருணகிரிநாதருக்கு முருகன் செய்த அருளாகவும் கொள்ளலாம். ஆனால் தேவாரம் பாடி உலகத்தவர் அனைவருக்கும் முக்திக்கு வழிகாட்டிய  திருஞானசம்பந்தர் எனக்கொள்வதே சிறப்பு.





 117.தென்சேரிகிரி
இது பல்லடத்திற்கு அருகே உள்ள இடம். செஞ்சேரி என்று சொல்கிறார்கள். அருணகிரிநாதர்  தரிசித்துப்பாடிய 117 வது தலமான இதற்கான இரண்டு பாடல்கள் இருக்கின்றன. இரண்டும் அருள் வேண்டுவதாக அமைந்த பாடல்.

சங்கோடு திகிரியது கொண்டேயு நிரைபிறகு
  சந்தாரும் வெதிருகுழ            லதுவூதித்

தன்காதல் தனையுகள என்றேழு மடவியர்கள்
  தங்கூறை கொடுமரமி        லதுவேறுஞ்

சிங்கார அரிமருக பங்கேரு கனுமருள
  சென்றேயும் அமரருடை        சிறைமீளச்

செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர்தொழு
  தென்சேரி கிரியில்வரு            பெருமாளே.


தண்பாரு முனதருளை              யருள்வாயே.

(எங்கேனும் ஒருவர் )

சங்குடன் சக்கரமும்  ஏந்தி,  பசு மந்தைகளின் பின் சென்று, தொளையிட்ட மூங்கில் குழலை ஊதியவனும்,
தன்மேல் கொண்ட ஆசையைக் கடக்க மன எழுச்சிபெற்ற பெண்களின்  ஆடையை எடுத்துக்கொண்டு குருந்த மரத்தில் ஏறியவனும், அழகிய உருவம் கொண்டவனுமான   திருமாலின் மருகனே !
தாமரை மலரில் வாழும்  பிரம்மனும் மருண்டுபோக, சென்று முறையிட்ட தேவர்களின் சிறையை நீக்கி, தேவர்களைப் பந்துபோல் சிதற அடித்து,
ஒன்றுகூடி அடியார்கள் அனைவரும் தொழும் தென்சேரிகிரியில் அமர்ந்த பெருமாளே !
குளிர்ச்சி பொருந்திய உன் திருவருளைத் தருவாயாக. 

உபதேசம் அருள


வண்டாடத் தென்றல் தடமிசை
  தண்டாதப் புண்ட ரிகமலர்
  மங்காமற் சென்று மதுவைசெய்          வயலூரா

வன்காளக் கொண்டல் வடிவொரு
  சங்க்ராமக் கஞ்சன் விழவுதை
  மன்றாடிக் கன்பு தருதிரு             மருகோனே

திண்டாடச் சிந்து நிசிசரர்
  தொண்டாடக் கண்ட வமர்பொரு
  செஞ்சேவற் செங்கை யுடையசண்         முகதேவே


சிங்காரச் செம்பொன் மதிளத
  லங்காரச் சந்த்ர கலைதவழ்
  தென்சேரிக் குன்றி லினிதுறை           பெருமாளே.


பண்டேசொற் றந்த பழமறை
  கொண்டேதர்க் கங்க ளறவுமை
  பங்காளர்க் கன்று பகர்பொருள்           அருள்வாயே


(கொண்டாடிக் கொஞ்சு )

தென்றல் தவழும் குளத்தை விட்டு நீங்காமல், அங்கு உள்ள தாமரை மலர்கள் மங்காது  அவற்றின் தேனை  வண்டுகள் ஆடிப்பருகும் வயலூரில் உறைபவனே !
கருத்த மேகம் போன்ற நிறமுடைய , போர் செய்யும் எண்ணமுடைய வலிய கம்சன் மடிந்து விழும்படி தாக்கி உதைத்துப் போராடிய  க்ருஷ்ணரிடம் அன்புகொண்ட  லக்ஷ்மியின் மருகனே !
அசுரர்கள்  சிதறித் திண்டாடும் படியாகவும், அடிமைப்படும் படியாகவும் செய்து, அவர்களுடன் சண்டையிட்ட  ஷண்முக தேவே !செந்நிறமான  சேவலைச் செங்
கையில் தாங்கியவனே!
செம்பொன்னின் அலங்காரம் கொண்ட அழகிய மதில்களைச்   சந்திரன் கதிர்கள்  தழுவுவதான தென்சேரிகிரியில் இனிதே வீற்றிருக்கும் பெருமாளே!
 தொன்மையான வேத மொழியைக் கொண்டு, தர்க்க வாதங்களுக்கு இடமில்லாதபடி, இடது பாகத்தில் உமையைக்கொண்ட சிவபிரானுக்கு முன்பு உபதேசித்த பிரணவப் பொருளை எனக்கும்  உபதேசித்து அருள்வாயாக.

இந்த இரண்டு பாடல்களிலும் பாகவத நிகழ்ச்சிகளைச் சொல்லியிருக்கிறார்.





118.பட்டாலி-சிவமலை
அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த  118வது தலமான பட்டாலி-சிவமலை கொங்குநாட்டில் காங்கேயத்துக்கு அருகில் உள்ளது. இதற்கு ஸ்தலபுராணம் இருக்கிறது, அருணகிரியார் பாடிய மூன்று பாடல்கள் இத்தலத்திற்கு இருக்கின்றன.

திருவடி பெற

முருகவிழ் தொடையைச் சூடி நாடிய
  மரகத கிரணப் பீலி மாமயில்
  முதுரவி கிரணச் சோதி போல்வய          லியில்வாழ்வே

முரண்முடி யிரணச் சூலி மாலினி
  சரணெனு மவர்பற் றான சாதகி
  முடுகிய கடினத் தாளி வாகினி          மதுபானம்

பருகினர் பரமப் போக மோகினி
  அரகர வெனும்வித் தாரி யாமளி
  பரிபுர சரணக் காளி கூளிகள்          நடமாடும்


பறையறை சுடலைக் கோயில் நாயகி
  இறையொடு மிடமிட் டாடு காரணி
  பயிரவி யருள்பட் டாலி யூர்வரு         பெருமாளே.


 உனதடி நிழலிற் சேர வாழ்வது          மொருநாளே

(இருகுழை இடறி )

நறுமணம் வீசும் மாலையைச் சூடி உனக்கு வாகனமாக விரும்பிய  பச்சை நிறமுள்ள தோகையைகொண்ட  சிறந்த மயில்மீது, சூரியனுடைய ஒளியைப்போல் விளங்கி வயலூரில் வாழ்பவரே !
வலிமை வாய்ந்த முடியையுடைய, போருக்கான சூலாயுத்தை ஏந்தியவள், மாலையை அணிந்தவள், தன்னைப் புகலாக அடைந்த சாதகர்களுக்குப் பற்றாக இருப்பவள்,  விரைவாகச் செல்லும்  யாளி அல்லது  சிங்க வாஹனத்தை யுடையவள்., 
 (வாமாசாரம்  பின்பற்றி )கள்ளுண்பவர்களுக்கு மேலான போகத்தை அளிக்கும் அழகி,,அரகர என அதிக ஒலி செய்பவள், சியாமள நிறம் உடையவள், சிலம்பணிந்த கால்களை உடைய காளி, 
பேய்கள் நடனமாடுவதும் பறைகள் ஒலிப்பதுமான   சுடுகாட்டுக் கோயிலின் தலைவி, சிவபிரானுடன் இருந்துகொண்டே காரணமாக நடனம் செய்பவள், பயிரவி தேவி பெற்றருளியவனும், பாட்டாலியூரில்  அமர்ந்திருப்பவனுமான பெருமாளே !
உனது திருவடியில்  பொருந்தி வாழும்படியான வாழ்க்கை ஒரு நாள் எனக்குக் கிடைக்குமா !ட்
அம்பாளுக்கு  லலிதா, புவனேஶ்வரி போன்ற சௌம்ய ரூபமும் உண்டு; அசுரர்களை வதைக்க எடுத்த துர்கை, காளி  போன்ற பயம்தரும் ரூபங்களும் உண்டு.  சிங்கம், புலியைக்கண்டு அதன் குட்டிகள் பயப்படுவதில்லை. அதுபோல் அம்பாளின் பயங்கர ரூபங்களைக் கண்டு பக்தர்கள் பயப்படத் தேவையில்லை!இரண்டையும் பல இடங்களில் அருணகிரிநாதர்  பாடியிருக்கிறார். தேவேந்திர சங்க வகுப்பிலுள்ள 16 அடிகளில் முதல் 12 அடிகளில் அம்பாளின் பலரூப வர்ணனைதான்!  இத்தகைய வாக்கை வேறு எங்கும் காணமுடியாது.

இளமையிலேயே  பக்தி

அத்தூர புவன தரிசன நித்தார கனக நெடுமதி
  லச்சான வயலி நகரியி               லுறைவேலா

அச்சோவெ னவச வுவகையி லுட்சோர்த லுடைய பரவையொ
  டக்காகி விரக பரிபவ              மறவேபார்

பத்தூரர் பரவ விரைவுசெல் மெய்த்தூதர் விரவ வருடரு
  பற்றாய பரம பவுருஷ            குருநாதா

பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை மயில்கள் நடமிடு
  பட்டாலி மருவு மமரர்கள்          பெருமாளே.


கொக்காக நரைகள் வருமுன மிக்காய விளமை யுடன்முயல்
  குற்றேவல் அடிமை செயும்வகை         யருளாதோ


(கத்தூரி யகரு )

தூரத்தில் வரும்போதே நிச்சயம் தரிசனத்தைத் தரும்  நெடிய பொன் மதிலை அடையாளமாகக் கொண்ட வயலூரில் அமர்ந்திருக்கும் பெருமாளே !
இது என்ன அதிசயம் என  பரவை நாச்சியார்  மகிழ்ந்து தன்வசமிழக்க, அவர்மீது கண்ணும் கருத்துமாயிருந்த  சுந்தரரின்  கவலை அறவே நீங்குவதற்கு,
இந்தப் பூமியில் பத்து இலக்கணங்களும் பொருந்தியிருந்த சுந்தரர் தம்மைப் பரவிப் போற்ற,  (அவருக்காக)  வேகமாக தூது சென்ற உண்மைத் தூதுவரும், தம்முடன் உள்ளம் கலக்கத் திருவருள் செய்பவரும் உற்ற துணையாக இருப்பவருமான சிவபிரானுக்கு பவுருஷம் நிறைந்த குருமூர்த்தியே !
பசிய ஓலைகள் நிறைந்து விளங்கும் பனைமரங்கள்  வளர்ந்துள்ள  இருண்ட சோலைகளில்  மயில்கள் நடனம் செய்கின்ற பட்டாலியூரில் அமர்ந்த பெருமாளே!
தேவர்கள் பெருமாளே !
கொக்குப்போல் வெண்ணிறமான நரைகள் வருமுன்பு, இந்த உடல் இளமையாக இருக்கும்போதே , முயற்சியுடன் உனக்கு  அடிமைபூண்டு  பணிவிடை செய்யும்படி அருள் தரலாகாதா !

சுந்தரருக்காக சிவபிரான் பரவை நாச்சியாரிடம் தூது சென்ற  லீலையை இங்கு நினைவு கூர்கிறார். 
இங்கு அருணகிரியாசான் ஒரு முக்கிய உபதேசம் செய்கிறார். தெய்வ, ஆன்மீக ஈடுபாடு வயதான காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்பதே பொதுவான  கருத்தாக இருக்கிறது. ஆனால் யாருக்கு எத்தனை வயது என்று யார் சொல்ல முடியும்? 
நீநாளும்  நன்னெஞ்சே நினைகண்டாய்  யாரறிவார்
சாநாளும் வாழ்நாளும்  சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளும்  தலைசுமப்பப் புகழ்நாமம்  செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.


என்று  பாடுகிறார் சம்பந்தர்.  அதனால் இளமையிலேயே இறை சிந்தனையைப் பெறவேண்டும்.




வம்பில்லாத முக்தி !

வெங்கைச்சுக் ரீபர் படையையி லங்கைக்குப் போக விடவல
  வென்றிச்சக் ரேசன் மிகமகிழ்          மருகோனே

வெண்பட்டுப் பூணல் வனகமு கெண்பட்டுப் பாளை விரிபொழில்
  விஞ்சிட்டுச் சூழ வெயில்மறை          வயலூரா

கொங்கைக்கொப் பாகும் வடகிரி செங்கைக்கொப் பாகு நறுமலர்
  கொண்டைக்கொப் பாகு முகிலென          வனமாதைக்

கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச்சொற் பாடு மிளையவ
  கொங்கிற்பட் டாலி நகருறை                    பெருமாளே.


சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள்
  சங்கற்பித் தோதும் வெகுவித          கலைஞானச்

சண்டைக்குட் கேள்வி யலமல மண்டற்குப் பூசை யிடுமவர்
  சம்பத்துக் கேள்வி யலமல               மிமவானின்

மங்கைக்குப் பாக னிருடிக ளெங்கட்குச் சாமி யெனவடி
 வந்திக்கப் பேசி யருளிய             சிவநூலின்

மந்த்ரப்ரஸ்த் தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி யலமலம்
  வம்பிற்சுற் றாது பரகதி           யருள்வாயே



பராக்ரமம் மிக்க சுக்ரீவருடைய  சேனையை  கடல்கடந்து இலங்கைக்குப் போகச் செய்தவனும்,  ஜெயத்தையே தரும் சக்கரத்தை ஏந்தியவனுமான  திருமால்  மிகவும் மனம் மகிழும் மருகனே !

வெண்பட்டு அணிந்தது போல் நல்ல பாக்கு மரங்கள்  பாளைகளை விரிக்கின்ற  சோலைகள் சூழ்ந்து வெய்யிலை மறைக்கின்ற  வயலூரில் உறைபவனே !
வள்ளியைப் பலவாறு புகழ்ந்து ஆசையுடன் கொஞ்சிப்பேசி இனிய சொற்களால் பாடிப்பரவிய இளையோனே ! கொங்கு நாட்டுப் பட்டாலியில் அமர்ந்த பெருமாளே !
சந்தேகக் கூச்சலோடு  வாதம் செய்யகூடிய ஆறுவித சமயிகளும், தாங்கள்  உறுதிசெய்துகொண்டு பேசுகின்ற  பலவிதமான சண்டைக்கு வேண்டிய  சாத்திர ஞானம் போதும், போதும்.
இமவான் புதல்வியான பார்வதிக்குப்  பாகர் என்றும், ரிஷிகள் எல்லாம் எங்களுக்குச் சுவாமி என்றும்,  திருவடியைத் துதிக்க சிவ நூல்களில் சொல்லப்பட்ட மந்திர-தந்திர  (சக்கர ) விளக்க ஆராய்ச்சி அறிவும் போதும், போதும்.
இங்கனம் வீணான வழிகளில் நான் சுற்றியலையாமல் மோக்ஷத்தை நீ தந்தருள்வாயாக.

இதுவும் மிக முக்கியமான பாடல். சமய விளக்கம் என்ற பெயரில் வீணான தர்க்கவாதங்கள் மிகுந்துள்ளன. ஒவ்வொரு சமயத்தினரும், அதற்குள் ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்குள் ஓயாது சச்சரவிட்டு வருகின்றனர். "சமய வாதிகள் தத்தம் மதங்களில் அமைவதாக அரற்றி மலைந்தனர் " என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். அருணகிரிநாதர்  எளிய,  நேரடியான பக்தி வழியையே போதிப்பவர். அதி தீவிர மந்திர-தந்திரங்கள் அவருக்குப் பிடித்தமில்லை.
"காட்டில் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின்
வீட்டிற் புகுதல் மிக எளிதே " என்று அலங்காரத்தில் சொல்வார்.
"ஆன பய பக்தி வழிபாடு பெறு முக்தி " என  திருவேளைக்காரன் வகுப்பில் சொல்வார்.  அதுபோல் இங்கும்  "வம்பில் சுற்றாது பரகதி அருள்வாயே " என்று வேண்டுகிறார். பக்தியே  நேர்வழி. வீணான சுற்றுவழிகள் தேவையில்லை. 
இதையே கீதையும் போதிக்கிறது.

मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु।
मामेवैष्यसि युक्त्वैवमात्मानं मत्परायणः।।9.34।।

மன் மனா பவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி யுக்த்யைவம் ஆத்மானம் மத் பராயணம்.
என்னிடமே மனதை நிலைக்கச்செய்தவனாக ஆகிவிடு. என் பக்தனாக ஆகிவிடு,
என்னை பூஜிப்பவனாக ஆகிவிடு. என்னையே நமஸ்கரி. இவ்விதம்  மனம், புலன் களை  என்னிடம் ஈடுபடுத்தி, (ஆத்ம சமர்ப்பணம் செய்து ) என்னையே அடையத்தக்க ஒரே புகலாகக் கொண்டு என்னையே அடைவாய்.

मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु।
मामेवैष्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे।।18.65।।

மன் மனாபவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோஸி மே.
என்னிடமே  மனதை நிலைக்கச்செய்தவனாக ஆகிவிடு. என் பக்தனாக ஆகிவிடு. என்னை பூஜிப்பவனாக ஆகிவிடு. என்னையே நமஸ்கரி. இவ்விதம் நீ என்னையே அடைவாய். இது சத்தியம் என பிரதிக்ஞை செய்கிறேன். ஏனெனில் நீ என் அன்புக்குரியவனாக இருக்கிறாய்.

பகவான் கீதையில் இவ்விதம் இருமுறை சொல்லி சத்யப் பிரதிக்ஞை செய்கிறார் எனில், இது எவ்வளவு உயர்ந்த உபதேசம் ! எனவே பக்திக்கு மீறிய முக்தி சாதனம் இல்லை. இதுவே அருணகிரிநாதர்  நமக்குச் சொல்லும் உபதேசம். 

வயலூர் பாடல் ஒன்றில் ( தலம் 92, குருதி கிருமிகள் ) "சுருதி வழிமொழி சிவகலை அலதினி அலம் அலம் "  =வேத மரபில் வந்த சிவஞானத்தைத் தவிர பிற கலைகள் போதும்,போதும் என்றார் இங்கு அந்த சிவ கலையிலும் மந்திரப் பிரஸ்தாரம் போன்ற வம்பில் சுற்றாத பரகதி வேணும் என்கிறார். அதாவது, முக்திக்கு நேர் சாதனமான  எளிய பக்தி தவிர பிற விஷய ஆராய்ச்சிகள் அவசியமில்லை என்கிறார். இதுவே அருணகிரிநாதரின் தலையாய  கோட்பாடு.