Saturday, January 12, 2019

18.திருப்புகழ் 123. பழநி-திருவாவினன்குடி

18. திருப்புகழ். 123. பழநி - திருவாவினன்குடி





அருணகிரிநாதர் தரிசித்த 123வது ஸ்தலம் பழநி. தமிழ்நாட்டு முருக ஸ்தலங்களில் மிகவும் புகழ் பெற்றது. பழநி மலைமேல் அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருப்பது திருவாவினன்குடி. இதுவே அறுபடைவீடுகளில் மூன்றாவதாகக் கருதப்படுகிறது. நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் 51 வரிகளில் திருவாவினன் குடியின் சிறப்பைப் பாடியிருக்கிறார்.
இதற்கு சிவமலை, சிவகிரி, பழநிச் சிவகிரி, பழனாபுரி என்றெல்லாம் பெயர்கள் வழங்கும். "அதிசயம் அனேகம் உற்ற பழநி ", "பதினாலு உலகோர் புகழ் பழநி" , "காசியை மீறிய பழநி ", "பிரகாசம்புரி பழநி" என்று பலவாறு வியந்து பாடியிருக்கிறார் அருணகிரிநாதர். யோக மரபில் பழநி மணிபூரகமாகக் கருதப்படுகிறது. 

பழநி பற்றிய புராணச் செய்திகள் அனேகமாக அனைவரும் அறிந்ததே. மலைமேல் தண்டாயுதபாணி ஸ்வாமி. இந்த விக்ரஹம் போகர் என்னும் சித்தர்  நவபாஷாணத்தினால் செய்ததாகச் சொல்வார்கள். இன்று வேறு விக்ரஹம் செய்துவைத்து அதற்கே பூஜை செய்கிறார்கள். திருவாவினன் குடியில் மயில்மேல் அமர்ந்த வேலாயுதப்பெருமாள். திருமுருகாற்றுப்படையில் மலைமேல் உள்ள கோயில் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.






காவடி எடுப்பது இத்தலத்திற்கே உரிய விசேஷ அம்சம்.



நமக்குக் கிடைத்திருக்கும்  திருப்புகழ்ப் பாடல்களில் அதிகம் பாடல்கள் -97- இத்தலத்திற்கே அமைந்துள்ளன. திருவாவினன்குடியைப் பற்றி 13 பாடல்களும், சிவகிரி-பழநிச் சிவகிரி பற்றி 6 பாடல்களும், வீரை-வீராபுரி 
பழநி பற்றி 6 பாடல்களும், பழநி பற்றி 72 பாடல்களும் இருக்கின்றன.அரிய கருத்துக்கள் நிறைந்த அற்புதப் பாடல்கள்.

திருவாவினன்குடி


படை வீடுகளில் மூன்றாவதான திருவாவினன் குடியைப்பற்றிய சில அருமையான பாடல்கள்:

துதிப்பாடல்கள்

நாத விந்துக லாதீ நமோநம
 வேத மந்த்ரசொ ரூபா நமோநம
  ஞான பண்டித ஸாமீ நமோநம        வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
 நாக பந்தம யூரா நமோநம        பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
 கீத கிண்கிணி பாதா நமோநம
 தீர சம்ப்ரம வீரா நமோநம           கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
 தூய அம்பல லீலா நமோநம
 தேவ குஞ்சரி பாகா நமோநம         அருள்தாராய்


 ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள்       பெருமாளே.

அருமையான துதிப்பாடல் இது போல இன்னொரு பாடல் :

போத கந்தரு கோவே நமோநம
 நீதி தங்கிய தேவா நமோநம
 பூத லந்தனை யாள்வாய் நமோநம        பணியாவும்

பூணு கின்றபி ரானே நமோநம
 வேடர் தங்கொடி மாலா நமோநம
 போத வன்புகழ் சாமீ நமோநம             அரிதான

வேத மந்திர ரூபா நமோநம
 ஞான பண்டித நாதா நமோநம
 வீர கண்டைகொள் தாளா நமோநம       அழகான

மேனி தங்கிய வேளே நமோநம
 வான பைந்தொடி வாழ்வே நமோநம
 வீறு கொண்டவி சாகா நமோநம             அருள்தாராய்


பாத கஞ்செறி சூரா திமாளவெ
 கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
 பார அண்டர்கள் வானா டுசேர்தர            அருள்வோனே

பாதி சந்திர னேசூ டும்வேணியர்
 சூல சங்கர னார்கீ தநாயகர்
 பார திண்புய மேசே ருசோதியர்              கயிலாயர்

ஆதி சங்கர னார்பா கமாதுமை
 கோல அம்பிகை மாதா மநோமணி
 ஆயி சுந்தரி தாயா னநாரணி                அபிராமி


ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
 கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
  ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள்  பெருமாளே.


இவை இரண்டுமே எளிய துதிப்பாடல்கள். இங்கு வரும்  சிவபிரான்-அம்பிகையின் நாமங்களைக் கவனிக்கவேண்டும். அரிய வாக்கு.

திருஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தர் செயல்களை முருகன் செய்ததாகச் சொல்லும் பாடல் :

பீலி வெந்துய ராலி வெந்தவ
 சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
  பீதி கொண்டிட வாது கொண்டரு        ளெழுதேடு

பேணி யங்கெதி ராறு சென்றிட
 மாற னும்பிணி தீர வஞ்சகர்
 பீறு வெங்கழு வேற வென்றிடு          முருகோனே

ஆல முண்டவர் சோதி யங்கணர்
 பாக மொன்றிய வாலை யந்தரி
 ஆதி யந்தமு மான சங்கரி                   குமரேசா


ஆர ணம்பயில் ஞான புங்கவ
 சேவ லங்கொடி யான பைங்கர
  ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள்           பெருமாளே.


கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
 ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு
  கூர்மை தந்தினி யாள வந்தருள்  புரிவாயே

( மூல மந்திரம்)


திருஞான சம்பந்தர்-பழநி
"வள்ளல் குருராயன் வாதுவென்ற சம்பந்தன்
வள்ளல் மலர்த்தாள் தலை." (ஓழிவில் ஒடுக்கம்- பாயிரம்.)

இதே கருத்தை இன்னொரு பாடலிலும் சொல்கிறார்:

நுகர்வித்தக மாகு மென்றுமை மொழியிற்
பொழி பாலை யுண்டிடு நுவல்மெய்ப்புள 
பால னென்றிடு           மிளையோனே

(பகர்தற் கரிதான )
இதை அருந்து, இதுவே ஞானம் தரும் என்று  உமையம்மை மொழிந்து, தந்த பாலை உண்டவனும், புகழும் வாய்மையும் நிறைந்தவனுமான குழந்தை என்று பாராட்டப்படும் இளையோனே !

இது திருஞான சம்பந்தர் சீர்காழியில் ஞானப்பால் அருந்திய நிகழ்ச்சியைச் சொல்கிறது.. சம்பந்தராக வந்தது முருகனே என்பது அருணகிரி நாதர் கொள்கை. சம்பந்தர்  ஞானம், புகழ், வாய்மை எல்லாவற்றிலும் சிறந்திருந்தவர். இதை சம்பந்தர் தேவாரத்தில் பார்க்கலாம்,

"ஞானமார் ஞான சம்பந்தன்"
"நீடு புகழ் ஞான சம்பந்தன் "
"சம்பந்தன் வாய்மைத்து இவை சொல்ல "
"ஞானசம்பந்தன் வாய்மை பண்ணிய அருந்தமிழ்"
"ஞான சம்பந்தன் பொய்யிலி "
என்றெல்லாம் தேவாரத்தில் வருகிறது, சம்பந்தர் வாக்கு சத்திய வாக்கு.இத்தனை கருத்துக்களையும்   "நுவல் மெய்ப்புள பாலன்"  என்ற வரியில் அடக்கிவிட்டார் அருணகிரி நாதர் ! 

பூஜையும் சிலவே புரிய 

உலக வாழ்க்கையில் மதிமயங்காமல் பூஜை செய்ய அருளவேண்டும் எனப் பாடுகிறார் :

பூத லந்தனி லேம யங்கிய         மதிபோகப்

போது கங்கையி னீர்சொ ரிந்திரு
 பாத பங்கய மேவ ணங்கியெ
 பூசை யுஞ்சில வேபு ரிந்திட         அருள்வாயே

தீயி சைந்தெழ வேயி லங்கையில்
 ராவ ணன்சிர மேய ரிந்தவர்
 சேனை யுஞ்செல மாள வென்றவன்          மருகோனே


தேச மெங்கணு மேபு ரந்திடு
 சூர்ம டிந்திட வேலின் வென்றவ
 தேவர் தம்பதி யாள அன்புசெய்               திடுவோனே

ஆயி சுந்தரி நீலி பிங்கலை
 போக அந்தரி சூலி குண்டலி
 ஆதி யம்பிகை வேத தந்திரி                  யிடமாகும்


ஆல முண்டர னாரி றைஞ்சவொர்
 போத கந்தனை யேயு கந்தருள்
 ஆவி னன்குடி மீதி லங்கிய                   பெருமாளே.


(வேயிசைந்தெழு )

இந்தப் பாடலில் ராமாவதாரத்தைச் சொல்கிறார். முருகன் அவதார ரகசியத்தையும் சொல்கிறார். இங்கு வரும் அம்பிகையின் நாமாவளியும் அருமையான வாக்கு.
மற்றொரு பாடலில் கிருஷ்ணரைச் சொல்கிறார் :

நுதிவைத்த கரா  மலைந்திடு
களிறுக்கு அருளேபு ரிந்திட
நொடியிற் பரிவாக வந்தவன்       மருகோனே
(பகர்தற் கரிதான )

கூர்மையான  நுனிப்பல்லை உடைய  முதலை வலியப் போராடிய கஜேந்திரன் என்னும் யானைக்கு அருள்புரிய  ஒரு நொடிப்பொழுதில் அன்புடனே வந்த திருமால்!

அருளை மறவாமை

ஒரு பாடலில் முருகன் தனக்கு திருப்புகழ் பாடுமாறு வயலூரில் அருளியதைச் சொல்கிறார் :

பாத பங்கய முற்றிட வுட்கொண்டு
ஓதுகின்ற திருப்புகழ் நித்தம்
பாடும் அன்பது செய்ப்பதியில் தந்தவன் நீயே
(கோல குங்கும )

அதேபோல தனக்கு ஜபமாலை அளித்ததையும் சொல்கிறார்:


அபகார நிந்தைபட்      டுழலாதே
அறியாத வஞ்சரைக்    குறியாதே
உபதேச மந்திரப்        பொருளாலே
உனை நான் நினைந்தருள்    பெறுவேனோ
இபமாமுகன் தனக்      கிளையோனே
இமவான் மடந்தையுத்     தமிபாலா
ஜெபமாலை தந்த சற்     குருநாதா
திருவாவினன் குடிப்      பெருமாளே

இறைவனை நினைத்துப் பாட

நாம் இறைவனை நினைந்து புகழ்ந்து பாடவேண்டும். ஆனால் எப்படி நினைப்பது? ஒரு அருமையான கருத்தைச் சொல்கிறார் :

வைப்பெனவே  நினைந்துனைப் புகழ்வேனோ 

(கனமாயெழுந்து )
இங்கு வைப்பு என்பது  எய்ப்பினில் வைப்பு- க்ஷேமநிதி! நமக்குக் கஷ்டம் வந்தபோது உதவுவது ! நமக்கு உள்ள சொந்த, நிலையான நிதி முருகனே! இப்படி நினைத்துப் புகழவேண்டும்.'
 " நீவேரா குல தனமு  ஸந்ததமு நீவேரா ஜீவனமு ஓ ராமா" என்பார் ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள்.








"தோகையம் பரிதனில் அற்புதமாக வந்தருள் புரிவாயே"

திருவாவினன் குடிப் பெருமாள்- வேலாயுதன்





ஞான இன்பத்தை வேண்டுதல்

சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
 செவிமீதி லும்பகர்செய்            குருநாதா

சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
 செயலேவி ரும்பியுளம்          நினையாமல்

அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
 மடியேனை அஞ்சலென        வரவேணும்


அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
 அருள்ஞான இன்பமது         புரிவாயே

நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
 ரகுராமர் சிந்தைமகிழ்         மருகோனே

நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு           விளைகோவே


தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
 திறல்வீர மிஞ்சுகதிர்             வடிவேலா

திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
 செகமேல்மெய் கண்டவிறல்        பெருமாளே.


எளிய பாடல்தான். முருகன் சிவனுக்கு உபதேசித்த விதத்தைச் சொல்கிறார்.
இதையே வேறொரு பாடலிலும் சொல்கிறார்:

அகரப்பொரு ளாதி யொன்றிடு 
முதலக்கர மான தின்பொருள்
அரனுக்கினி தாமொ ழிந்திடு       குருநாதா

(பகர்தற் கரிதான )
அகரம், உகரம், மகரம் ஆகிய எழுத்துக்கள் அடங்கியதும்,
எல்லா மந்திரங்களுக்கும் முதல் அக்ஷரமாக இருப்பதுமான
ப்ரணவத்தின் பொருளை சிவபிரானுக்கு இனிதாக எடுத்துரைத்த  குருநாதனே!


முருகன் அருளும் ஞானம்  அறிவைப் பெருக்கி, இடரைத் தொலைத்து இன்பம்தரும்  தன்மையது.
நவலோகமும்  கைதொழு நிஜ தேவ  = நமது பரதக்கண்டம்போல ஒன்பது கண்டங்கள் இருக்கின்றன. அவை அனைத்திலும் வாழும் உயிரினங்களுக்கு என்றும் உள்ள தெய்வம் முருகனே. அதனால் அவர்கள் அனைவரும் கைகூப்பித் தொழுகின்றார்கள்.
அலங்க்ருத நலமான விஞ்சை கரு விளை கோவே = அலங்காரமான நலம் விளைக்கும் வித்தைகள் அனைத்தும் இறைவனிடமிருந்தே வந்தன.  வேதாகம சாஸ்திரங்களை வெளிப்படுத்தியவர் முருகனே. 
" வேதா சாஸ்த்ராணி விஞ்ஞானம் ஏ தத் ஸர்வம் ஜனார்த்தனாத் " என்று விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் வருகிறது.

செகமேல் மெய்கண்ட விறல் பெருமாளே = உலகத்தில் உண்மைப் பொருளைக் கண்டு  தெரிவித்த திறம் வாய்ந்த பெருமாள். இது திருஞான சம்பந்தராக வந்ததைக்  குறிக்கலாம் அல்லது ருத்ரஜன்மராக வந்து சங்கப் புலவர்களின் கலகம் தீர்த்ததைக் குறிக்கலாம்.
இப்படி அருமையான பாடல்கள் திருவாவினன் குடியில் பாடியிருக்கிறார்.